Tuesday, April 6, 2010

deyyyyyyyyyyyy அறிவாளிடா நீ

கண்டிப்பா இது ஒரு மொக்கை பதிவுதான், ஆனால் உண்மைச் சம்பவம்.

காலேஜ் முதல் வருஷம் படிக்கும்போது நடந்தது (காலேஜ்-லாம் படிச்சியா நீ-னு யாரும் கேக்கக் கூடாது, நான் படிச்சேன்!!!! - (நானா படிச்சேன் - எங்க அப்பாவோட சதி) ). நான் ஸ்கூல் படிக்கும்போதும் சரி காலேஜ் முதல் செமஸ்டர் வரைக்கும் பிட்/காப்பி அடிச்சதே இல்லை.

இரண்டாவது செமஸ்டர் எக்ஸாம்-கு நல்லாத்தான் படிச்சேன் ஸ்டடி ஹாலிடேஸ்-ல மட்டும். முதல் வருஷம் மட்டும் தமிழ் & இங்கிலீஷ் பேப்பர்-ஸ் இருந்துச்சு. எங்களுக்கு இருந்த இங்கிலீஷ் பேப்பர்-ல என்ன குஷ்டம்னா கண்ட்றாவியான டாபிக்-ல எல்லாம் எவனோ கவிதை எழுதி வெச்சிருந்தான் அதுல முக்கியமானது கழுதை-ய பத்தினது - அது எப்டி இருக்கும், எப்டி நிக்கும், எப்டி கத்தும்னு ! தேவையா எங்களுக்கு .

எங்கள பத்தி எவனோ எழுதினது நாங்க படிக்கணுமான்னு ரோஷப்பட்டு படிக்காம விட்டாச்சு. அதுலயும் எங்க இங்கிலீஷ் மாஸ்டர்-சே வேண்டாம்னு சொல்லி விட்டாங்க. சொல்லிக் குடுத்தாலே நாங்க படிச்சு கிழிப்போம். இதுல அவங்களே வேண்டாம்னு சொல்லிட்டா அந்த கழுதை-ய பத்தி சொல்லவே வேண்டாம்.

எக்ஸாம் ஹால்-கு முன்னாலே அப்போதான் தீவிரமா படிக்கற மாதிரி எப்பவும் போல நடிச்சுட்டு இருந்தோம். திடீர்னு பாத்தா எங்க இங்கிலீஷ் மாஸ்டர்-ஸ் ரெண்டு பேரும் வேகமா வந்திட்டு இருந்தாங்க. ஒரு பெரிய அறிவிப்பு.

என்னான்னா அவங்க நடத்தாம போன அந்த கழுதை கவுஜை மற்றும் அவங்க வேண்டாம்னு  முடிவெடுத்த எல்லா பாடத்துல இருந்தும் கேள்வி வந்திருக்குனாங்க. (எங்களுக்கு பாடம் எடுத்தா அவங்க வெளங்கிடுவைங்களாக்கும் - கேள்வி புரியுது ஆனா நோ கமெண்ட்ஸ்). என்ன பண்றதுன்னு எங்களுக்கு ஒன்னும் புரியலை. மாஸ் கட் தெரியும் மாஸ் பெயில் நடந்தா எப்டி இருக்கும்னு யோசிச்சு பாத்தேன்.

இந்த இடத்துல ஒரு சின்ன flashback - எங்க அப்பா காலேஜ்-ல சேத்தும்போது சொன்ன ரெண்டு கண்டிஷன்- ல ஒண்ணு 60 % மார்க் வாங்கணும் எல்லாம் சுப்ஜெக்ட்-லயும் (இன்னொரு கண்டிஷன் என்னன்னு கேக்கறீங்கள அது வேற மேட்டர் அப்புறம் சொல்றேன்)

இங்கே நிலைமை பெயில்-ஆ போற மாதிரி இருக்கு இதுல எங்கே 60 % மார்க் வாங்கறது. வேர்த்துப் போச்சு. ஆனா எங்க மாஸ்டர்ஸ் ரொம்ப நல்லவங்க. எங்கள அவங்களே பிட் எடுத்துட்டு போகச் சொல்லிட்டாங்க (இது நெஜம்மாவே நடந்துச்சு ). கொஞ்ச நேரம் அந்த வராண்டால பேச்சு சத்தமே இல்லை. வேற ஒரு சத்தம் மட்டும் வந்துச்சு. என்னனு யோசிக்கறீங்களா??   நோட்ஸ் கிழிச்சுட்டு இருந்தோம் (யெஸ் நானும்தான் வேற வழி). ஒரு வழியா பிட் எடுத்துட்டு எக்ஸாம் ஹால் போயாச்சு. அதுக்கு அப்புறம் இன்னும் முக்கியமான சில திருப்பங்கள்.

வாழ்க்கைல முதல் தடவை பிட் அடிக்கறேன் அதுனால முகம் எல்லாம் வேர்த்துப் போய் இருக்கேன். எனக்கு பக்கத்துல ஒரு Bcom  student இருந்தான். அவன் வேற என்னை ஒரு மாதிரி பாத்தான்  (அது எனக்கு ரெண்டு மாதிரி மட்டுமில்லை மூணு மாதிரி கூட தெரிஞ்சது :( ). Question பேப்பர் குடுத்தாங்க.

என்னதான் முதல் தடவைனாலும் வெளிய காட்டிக்காம முதல் பதிலா எனக்கு தெரிஞ்ச ஒரு கேள்விக்கு பதில் எழுதிட்டேன். அடுத்தது அந்த பிட்-ல இருந்த ஒரு பதில் இப்டி ரெண்டு பிட் அடிச்சுட்டேன். இதுல என்ன விஷயம்ன பக்கத்துல இருந்த பய ஒரு மாதிரி முறைச்சு பாத்துட்டே இருந்தான். அய்யோ எங்கேயாவது போட்டு குடுதுட்டான்ன என்ன பண்றது எனக்கு குலை நடுங்கிட்டே இருந்துச்சு. திடீர்னு ஏதோ பேச முயற்சி பண்ணான். எவ்ளோ நேரம்தான் தள்ளி தள்ளி உக்கார முடியும் ஒரு டெஸ்க்-ல.

சரி மானம் போறதுன்னு ஆய்டுச்சு என்னதான் சொல்றான்னு கேக்கலாம்னு என்ன-னு கேட்டா !!!!! "என்கிட்டே நிறைய பிட் இருக்கு உனக்கு வேனுமான்றான் " லூசு லூசு லூசு லூசு (அவனையா என்னையான்னு தெரியலை ஆனாலும் திட்டிட்டே) இல்லை வேணாம் எழுதி முடிச்சுட்டேன் அந்த 10  மார்க் கேள்வி-னு சொல்லிட்டேன்.

இது இப்டி போயிட்டு இருக்கும்போது எங்க இங்கிலீஷ் மாஸ்டர் வேகமா கிளாஸ்-கு வந்தாரு. ஏதோ flying  squad -ஆமே அது வருது. பசங்களா உங்க கிட்டே இருக்கற பிட்-எல்லாம் குடுத்துடுங்க -னாரு. குடுக்கறது பிரச்சினை இல்லை. ஆனா அந்த மாஸ்டர்-கு என் மேல கொஞ்சம் மரியாதை இருந்துச்சு - படிக்கற புள்ளைன்னு (சத்தியமா) நான் எப்டி குடுக்க முடியும். சரி பக்கத்துல இருக்கற புத்திசாலிய கேப்போம்னு அவங்ககிட்டே சொன்னேன். "எங்கே இந்த பிட்-யும் சேத்து குடுத்துட முடியுமான்னு" . (நம்மால ஒருத்தன் கேட்டா பேர் வாங்கறாநேன்னு  கஷ்டமாத்தான் இருந்துச்சு ஆனாலும் வேற வழியில்லை.) "சரி"-னு அவனும் வாங்கிட்டான்.

எங்க டெஸ்க் பக்கத்துல சார் வந்துட்டாரு. என்கிட்டே கேட்டாரு இல்லைன்னு சொல்லிட்டேன் (ஹி ஹி ஹி ஹி) அந்த பையன் கிட்டே கேட்டாரு. என்ன கொடுமைனா அவன் எடுத்தான் எடுத்தான் எடுத்துக்கிட்டே இருந்தான். shoe , பெல்ட், ஷர்ட் காலர், ஷர்ட் கை மடிப்பு, பேன்ட் பாக்கெட்- னு எடுத்துக்கிட்டே இருந்தான். மொத்ததுல அவன் ஒரு புக் முழுக்க எடுத்துட்டு வந்திருந்தான். சரி நம்மால ஒன்னும் இவன் மானம் ஒன்னும் போகலைன்னு ஒரு சந்தோசம்.

ஒரு வழியா எக்ஸாம் முடிச்சேன் எப்பவும் போல எங்க கிளாஸ் பசங்களுக்கு one மார்க் answers சொல்லிட்டு.

இந்த பிட் விசயத்துல ஒரு பெரிய ட்விஸ்ட்-ஏ இதுக்கு அப்புறம்தான். எக்ஸாம்-கு அப்புறம் எல்லார் கிட்டயும் கேட்டுட்டு இருந்தேன் எப்டி எழுதினாங்கனு தேவையே இல்லைதான் - ஏன்னா எல்லாருமே பிட் அடிச்சுதான் எழுதினோம். ஆனாலும் ஒருத்தன் ரொம்ப சோகமா இருந்தான். என்ன கோபி எப்டி எழுதினீங்க எக்ஸாம்-னு கேட்டேன். ரொம்ப கஷ்டம்  அனு-னு சொன்னான். எனக்கு பயங்கர ஷாக். என்னடா இவன் மட்டும் பிட் அடிக்காம எழுதினான்னு. ஏன் கோபி என்ன ஆச்சுன்னு டென்ஷன்-ஓட கேட்டேன்.

ஏன் ஏன் ஏன் எனக்கு மட்டும் பல்பு குடுக்கறதுக்கு மட்டும் இத்தனை பேர் காத்திட்டு   இருக்காங்க. முகத்துல reaction -ஏ இல்லாம சொல்றான். இல்லை அனு நிறைய பிட் எடுத்துட்டு போனதால எந்த பதில் எங்கே இருக்குனு தேடரதுலையே டைம் ஆய்டுச்சு-னு. deyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy யார்ரா அறிவாளி இங்கே. நீயா நானா சத்தியமா நீதாண்டா.

Wednesday, March 31, 2010

இன்று தொடங்கி இருக்கும் புத்தகம்

இன்று தொடங்கி இருக்கும் புத்தகம்

கவிதை தொகுப்பு

அதீதத்தின் ருசி - மனுஷ்ய புத்திரன்

விமர்சனம் எழுதும் அளவிற்கு இன்னும் உள் செல்லவில்லை. பைத்தியக் கவிதைகளின் தொகுப்பு மிகவும் மனதிருக்கு நெருக்கமாக இருக்கிறது. சிநேகிதிகளின் கணவர்கள் - இது ஆணுக்கு மட்டுமில்லை பெண்ணிற்கும் இது உண்டு. விரிவாக பேசுவோம்.

Tuesday, March 30, 2010

நேற்றிலிருந்து இன்று வரைப் படித்தவை

நேற்றிலிருந்து இன்று வரைப் படித்தவை

1 . மணற்கேணி - யுவன் சந்திரசேகர் - புனைவுகளின் நடனம்
2  . சுதந்திர பூமி - இந்திரா பார்த்தசாரதி - அரசியலின் எதார்த்தம்

வெகு தீவிரமாக படித்து வருகிறேன். என்னிடம் இருக்கும் பல புத்தகங்களை அவ்வப்போது தூசு தட்டி மட்டுமே வைத்து இருக்கிறேன் பல நாட்கள். ஆனால் இப்போது அதில் சில முக்கியமான புத்தகங்களையாவது படிக்க வேண்டும் என்று தொடங்கி உள்ளேன். அவ்வப்போது எனது கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதலில் இதை பதியவும் ஆரம்பித்திருக்கிறேன்

நீங்கள் படித்தவைகளில் சிறந்தவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்களேன் :)

Monday, March 29, 2010

மார்ச்-இல் படித்த புத்தகங்கள்

மார்ச்-இல் படித்த புத்தகங்கள்

1 . கனக துர்கா - பாஸ்கர் சக்தி
2 . லெட்சுமணப்பெருமாள் கதைகள்
3 . உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - க.சீ. சிவகுமார்

விமர்சனமாக இல்லை. ஆனால் கருத்தாகப் பதிகிறேன். இப்போதும் உள்ளே நின்று ஏதோ தனியாய் பேசிக்  கொண்டிருக்கிறது  லெட்சுமணப் பெருமாள் கதைகள் படித்தபின். ஒவ்வொரு சிறுகதையாக பேச வேண்டியது அவசியம். பொறுமையாய் வருகிறேன்.

படித்தவை, சிறுகதைகள்

Saturday, December 19, 2009

அமைதி

இந்த ஒரு வாரம் மிகப் பெரிய சவால் எனக்கு. எனது வாழ்நாளில் நான் பேசாமல் இருந்ததாக சரித்திரமே இல்லை. ஆனால் இன்று அந்த சரித்திரம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுக்க நான் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம் நான் எப்போதும் பேசவேண்டும் என்றால். பார்ப்போம்.

Thursday, November 12, 2009

கற்புக்குச் சான்றிதழ் - அந்தக் கேள்வி

என்னுடைய கவிதைப் பதிவுகள் பகுதியில் இதை அடிப்படையாக வைத்து எழுதி இருந்த கவிதைக்கு நிறைய பின்னூட்டங்கள். ஆனால் எதற்காக அந்த பதிவு என்று தெரியாதவர்களுக்கு இந்த பதிவு


பெயர் வெளியிட விரும்பாத வாசகர், பெங்களூரு.
''எனக்குச் சமீபத்தில்தான் பெற்றோர் பெண் பார்த்தார்கள். அந்தப் பெண்ணை எனக்குப் பிடித்திருக்கிறது. மூன்று மாதம் கழித்துத் திருமணம் நிச்சயித்து இருக்கிறார்கள். இந்த நிலையில், எனது போனுக்கு அழைத்த அறிமுகம் இல்லாத நபர் ஒருவர், அந்தப் பெண்ணைப்பற்றி தப்புத் தப்பாகச் சொன்னார். நான் குழம்பிவிட்டேன். எனக்கு நிச்சயித்த பெண்ணின் கன்னித்தன்மையைப் பரிசோதிக்கச் சொல்லி நான் வற்புறுத்த முடியுமா? அது எதுவும் சட்ட விதிமீறல் ஆகுமா?''

Friday, November 6, 2009

நானும் எழுதிட்டேன் திடுக்கிடும் உண்மைகள் லிஸ்ட்

என்னையும் ஒரு ப்ளாகரா மதிச்சு அழைத்து சிறப்பித்த முரளிக்கு முதற்கண் பெரிய வணக்கத்தை தெரிவித்துக் கொல்கிறேன் (ஆமா அதே கொல்கிறேன் தான்). பின்னே என்னங்க இந்த மாதிரி வம்புல மாட்டிக்கக் கூடாதுன்னுதான்  கவிதைன்ற பேர்ல எதையோ எழுதி தப்பிச்சுட்டு இருந்தேன். மாட்டி விட்டுடியே பரட்டை. யாரும் ஆட்டோ எல்லாம் அனுப்ப மாட்டாங்களே ?

இந்தப் பதிவோட விதிகள்:

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்



3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.


4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.


5. இந்த லிஸ்டில் நீங்க சொல்றவரு இப்ப உயிரோட இருக்கணும்.




பிடிச்சவங்க : என்னத்த சொல்ல. எனக்கு பிடிச்சவங்கள உங்களுக்கு புடிக்காம இருக்கலாம் உங்களுக்கு பிடிச்சவங்கள எனக்கு பிடிக்காம இருக்கலாம் இல்லை உங்களுக்கு பிடிச்சவங்களையே எனக்கும் பிடிக்கலாம் எனக்கு பிடிச்சவங்களையே உங்களுக்கும் பிடிக்கலாம் (அனு போதும் ஆரம்பத்துலையே உளறத் தொடங்கிட்டே இன்னும் என்ன எல்ல்லாம் எழுதப்போரயோ. கடவுள் விட்ட வழி)

பிடிக்காதவங்க  :இதுக்கு நிறைய காரணங்கள்  இருக்கும் ஆனா சொல்ல மாட்டேனே. ஆளச் சொல்வேன் ஆனாலும்


1.அரசியல் தலைவர்

பிடித்தவர் : ஒரு காலத்துல வை. கோ இப்போ தயாநிதி மாறன்
பிடிக்காதவர்: சொல்லலாமா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. இருந்தாலும் பிடிக்காதவர் கலைஞர். அவரோட குடும்ப பாசம் பிடிச்சிருந்தாலும் கொஞ்சமாவது மக்களை பத்தியும் யோசிக்கலாம். 


2.எழுத்தாளர்

பிடித்தவர் : எஸ்.ராமகிருஷ்ணன், சுஜாதா (அவர் இறந்தத இன்னும் ஒத்துக்க முடியல அதான் அவர் பேரும்) பாலகுமாரன், சுந்தர ராமசாமி, ராஜேஷ் குமார், படுதலம் சுகுமாரன் 
பிடிக்காதவர் : அனுராதா ரமணன் (இந்த அன்புடன் அந்தரங்கத்தை நிறுத்துங்க மேடம்) - முரளியை வழிமொழிகிறேன், ரமணிச் சந்திரன், சாரு, 


3.கவிஞர்

பிடித்தவர் :  மனுஷ்ய புத்திரன், வாலி, அய்யனார் , ரிஷான், ரமேஷ் பிரேம் 
பிடிக்காதவர் : பா. விஜய்


4.இயக்குனர்

பிடித்தவர் : மணிரத்தினம், வெற்றிமாறன், k . s . ரவிக்குமார் (கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும்), சுந்தர் C  (இயக்குனரா மட்டும்), KB , ருத்ரைய்யா,  மிஷ்கின், அமீர், சசிக்குமார்
பிடிக்காதவர் : பேரரசு, விசு, s . j . சூர்யா, லாரன்ஸ் ராகவேந்தரா


5.நடிகர்

பிடித்தவர் : ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், மணிவண்ணன், சத்யராஜ் , பிரபு தேவா (நடிகரா மட்டும்)
பிடிக்காதவர் : s . j . சூர்யா, சிம்பு (கோவில் படம் தவிர)


6.நடிகை

பிடித்தவர் : ஜோதிகா, பூஜா (ரொம்ப அழகா இருக்காங்க என்னை பொருத்தவரைக்கும்), ராதா,  ஊர்வசி ,  தனிஷா (காஜோல் தங்கச்சிங்க வேற என்ன வேணும் இருந்தாலும் ரொம்பவே அழகான பொண்ணு) , த்ரிஷா , நயன்தாரா
பிடிக்காதவர் : சினேகா, அம்பிகா, சதா, அசின்


7.இசையமைப்பாளர்

பிடித்தவர் : இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரகுமான்
பிடிக்காதவர்: ஹாரிஸ் ஜெயராஜ் (ரொம்ப நாளா ஒரே ட்யுன வச்சு ஓட்டிட்டு இருக்காரு) இன்னும் நிறைய பேர் இருக்காங்க


8. பாடகி

பிடித்தவர் :சித்ரா, ஸ்வர்ணலதா
பிடிக்காதவர் :அனுராதா ஸ்ரீராம்


9. தொழிலதிபர்
பிடித்தவர் :எங்க ஊர் முழுக்க தொழில் அதிபர்கள்தான் இதுல யார சொல்றது யார விடறது. அதுனால எல்லாரையும் புடிக்கும் (அப்பாடா தப்பிச்சாச்சு)
பிடிக்காதவர் : சத்யம் கம்ப்யூட்டர்ஸ்


10. சின்னத்திரை நட்சத்திரம்

பிடித்தவர் : பாலாஜி, சின்மயீ
பிடிக்காதவர் : கோபிநாத்,  லட்சுமி (இது கதையல்ல ஜீவன - கன்னடத்துலையும் இந்த அம்மா இதையேதான் பண்ணிட்டு இருக்காங்க ), DD

பின்குறிப்பு : தோணின எல்லாம் எழுதிட்டேன் ஆட்டோ ஏதும் வந்துச்சு டேக் டைவர்சன்-னு சொல்லி முரளி விலாசத்துக்கு அனுப்பிடுவேன் .

விளையாட்டை விளையாட்டாகவே தொடர நான் அழைப்பது

1 . ராஜசேகர் (http://manathilpattavai.blogspot.com/)
2 . முத்து (http://onceinourlife.blogspot.com/)