Tuesday, October 28, 2008

மறக்க முடியாத பயணம்


























மற்றுமொரு பயணம் - தொடர்ச்சி...

இன்னைக்கு அந்த கதையை முடிச்சிடறேங்க.

இருங்க இருங்க அந்த வெடிகுண்ட தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி, இன்னும் ரெண்டு, மூணு வில்லங்கங்களையும் கேட்டுக்கோங்க. இந்த GPS-னு சொன்னாங்களே அதை கார்ல முன்னால கண்ணாடில நடுவுல ஒட்டணுமாம், இந்த புத்திசாலி அவன் சீட்டுக்கு முன்னாடி அவனுக்கு வசதியா ஒட்டி வச்சிருந்தான். அது ஒரு உலக மகா குத்தமாமாம்.

அடுத்தது நம்ம ஊர்ல எல்லாம் காரை நிறுத்தனவுடனே இறங்கற மாதிரி நான் உடனே இறங்கிட்டேன். உடனே உள்ள இருந்து கத்தினானுங்க இங்க எல்லாம் இறங்கக்கூடாதுன்னு. என்னங்கடா அநியாயம் இது காரை நிறுத்தினா இறங்கறது ஒரு தப்பான்னு டபக்குனு காருக்குள்ள புகுந்துட்டேன்.

கணக்கு பாத்தா இப்பவே வாங்கப்போற டிக்கெட்டுங்களோட எண்ணிக்கை கண்ணைக்கட்டுது.

இப்ப க்ளைமேக்ஸ். அந்த போலீஸ்கார மாமா வந்து ஸ்லோமோஷன்ல சொல்றாரு " தம்பி இந்த காரோட ரெஜிஸ்டிரேஷன் போன வருஷமே முடிஞ்சு போச்சு இந்த கார ரோட்ல ஓட்டினதுக்கே உன்னை உள்ள தள்ளனும் கொஞ்சம் கீழ இறங்கறீங்களா"ன்னு. காரை போலீஸ் ஸ்டேஷன்க்கு எடுத்துட்டு போக வண்டி வந்துட்டு இருக்கு, இறங்கி என் வண்டில ஏறுங்கன்னு ஏதோ பெருசா lift குடுக்கறமாதிரி பெருந்தன்மையா சொல்றாரு.

அடப்பாவிகளா ஒரே ஒரு நாள் வெளிய கூட்டிட்டு போங்கன்னு சொன்னதுக்கு இப்படி போலீஸ் வண்டில ஏத்திட்டீங்களேடா. எங்க குடும்ப கெளரவம் என்ன ஆகறது, எங்க வம்சத்துல யாரும் போலீஸ் வேலைக்கு கூட போனதில்லையே (கிடைச்சதில்லைன்றது வேற விசயம்), நாளைக்கு இந்த விசயம் பேப்பர்ல வந்தா எனக்கு கல்யாணமே நடக்காதே-னு மனசுக்குள்ள புலம்பிட்டு (வாய் விட்டு புலம்பினாலும் கூட வந்த ரெண்டு புண்ணாக்குங்களுக்கும் புரியாதுன்றது மேட்டரு) போலீஸ் கார்ல ஏறி உக்காந்தேன் (படுபாவி போலீஸ்காரன் - இனிமேல அவனுக்கு என்ன மருவாதி - என்னையும் பின்னால சீட்ல உக்கார சொல்லிட்டான், முன்னால சீட்ல ஒரு கெத்தா உக்காந்துட்டு போகலாம்னு நினச்சா. அவன் அப்பன் வீட்டு சொத்தா தேஞ்சு போகுது. என்னவோ போங்க. )

சரி அந்த போலீஸ்காரன் நம்மள வீட்ல விட்டுடுவான்னு நினச்சிட்டு உக்காந்திருந்தா, பக்கத்து போலீஸ் ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு போயிட்டான். இதெல்லாம் விடியக்கால 4 மணிக்கு நடக்குது.

அப்புறம் அந்த போலீஸ் ஸ்டேஷன்க்கு ஒரு டாக்ஸி வரச்சொல்லி வீட்டுக்கு வந்ததுக்குப்புறம் பாத்தா, கன்னா பின்னான்னு டிக்கெட் குடுத்துருக்கான் அதுல முக்கியமா ஒரு டிக்கெட் NO PARKING-ல வண்டியை நிறுத்திப்போட்டம்னு, அது எப்பன்னு யோசிச்சிட்டு இருந்தா, பின்னால சீட்ல தூங்கிட்டு இருந்த விளக்கெண்ணெய் சொல்லுது, போலீஸ் வண்டி பின்னால வந்தப்போ நிறுத்தினம்ல அங்க NO PARKING போர்டு இருந்துச்சாம - அத எப்ப சொல்லுது பாருங்க அது.

Thursday, October 9, 2008

மற்றுமொரு பயணம்

கொஞ்ச நாளைக்குப்பிறகு எழுதறேன். மொத மொதல்ல அமெரிக்கா வந்திருக்கறமே எங்கியாவது போலாமேன்னு இங்க இருக்கறவங்களைக் கேட்டு வாழ்க்கையில முதல் முறையா நிஜம்மா முதல் முறையா இங்க இருக்கற ஒரு டான்ஸ் கிளப்புக்கு போனேன். அட கூட ஆளுங்க இருந்தாங்கப்பு. அங்கே வேடிக்கை பாத்ததெல்லாம் ஒண்ணும் சொல்ற மாதிரி இல்லை. அத விடுங்க. (அதைத்தனியா கேக்க நினைக்கறவங்களுக்கு தனி மடல் படங்களுடன் அனுப்பபடும்). இது வேற கதை (சோகக்கதை) சொல்லும் நேரம்.
அந்த கிளப்புக்கு போனதே ராத்திரி 11 மணிக்கு. பாஸ்போர்ட் எல்லாம் கைல இருக்கான்னு செக் பண்ணி எடுத்துட்டு, கார்ல பேப்பர்ஸ் எல்லாம் செக் பண்ணிட்டு 3 பேர் கிளம்பினோம். கிளம்பும்போதே எங்க ஊர்ல இருக்கற குல தெய்வத்துக்கெல்லாம் வேண்டிட்டு வலது கால் எடுத்து வெச்சு கார்ல ஏறி உக்காந்தாச்சு.

ஒரு நியாய தர்மம் பாக்காம அந்த ஊர் குளிருது. நான் லேடி விசயகாந்த் மாதிரி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு முட்டி வரைக்கும் கோட் எல்லாம் போட்டுட்டு போறேன். இந்த ஊர்ல இருக்கறவங்க எல்லாம் பொண்ணுங்களே இல்லைங்க. நமீதா ரேஞ்சுக்கு முழுசா துணி போட்டு இருக்காங்க. இதெல்லாம் பாத்துட்டு ஒரு வழியா 1 மணி வாக்கில அங்க இருந்து கூட வந்த பசங்களை கிளப்பிட்டு அந்த ஏரியாவை விட்டு கிளம்பினோம். செம பசி. நான் வேற ரொம்ப்ப்ப்ப்ப நல்லவ மாதிரி ஒரு கிளாஸ் தண்ணி கூட குடிக்காம அந்த கிளப்ல இருந்து கிளம்பிட்டேன்

கூட இருந்த பசங்ககிட்ட "சாமியோவ் சாப்பிட ஏதாவது வாங்கித்தாங்க சாமியோவ்"னு கெஞ்சவே ஆரம்பிச்சிட்டேன். அது ஏதோ GPS ஆமே அத நம்பிட்டு கார் ஓட்டினவன் தேடறான் தேடறான் தேடிட்டே இருக்கான் ஒரு ரெஸ்டாரண்ட்டை ரெண்டு மணி நேரமா. சுத்தமா பொறுமை போயிடுச்சி எனக்கு. சரிடா வீட்டுக்காவது கொண்டு போய் விடு ஒரு கிளாஸ் பாலாவது குடிச்சிட்டு படுத்துடறேன் ஒரு வழியா அவனை கன்வின்ஸ் பண்ணி வீட்டுக்கு போக காரை திருப்பியாச்சு.

அப்பதாங்க சனி பகவான் அந்த வண்டியோட ஆக்ஸிலேட்டர்ல ஏறி உக்காந்தாரு. ஒரு சிக்னல்ல கொஞ்சமே கொஞ்சம் வேகமா அழுத்தினான் ஆக்ஸிலேட்டரை. கொஞ்ச நேரத்துலயே எங்களுக்கு பின்னாடி ஒரு பாடிகார்ட் மாதிரி ஒரு போலீஸ்கார் வந்துச்சி. பரவால்லியே நம்ம யாருன்றது இந்த ஊரில இருக்கறவங்களுக்கு கூட தெரியுதே. நமக்கு பாதுகாப்புக்கு உடனே ஆள் அனுப்பிட்டாங்களேன்னு நினைச்சிட்டிருந்தேன். இந்த பையன் காரை உடனே ஓரங்கட்டி நிறுத்துனான். சரி அவருக்கு என்னமோ அவசரம்னு நினச்சேன்.

காரை நிறுத்தினதுக்குப்பிறகு அவன் இறங்கவும் இல்லை. என்னடான்னு பாத்தா அந்த கார்ல இருந்து ஒரு போலீஸ்கார் வந்தார் ஸ்லோமோஷன்ல. எங்க போனாலும் இந்த போலீஸ்காரங்க ஸ்லோமோஷன்ல வரதை நிறுத்தவே மாட்டேன்றாங்க. எனக்கு மட்டும் ஏன் இப்படி.

வந்து அந்த பையன்கிட்ட நீ ஓவர் ஸ்பீட்ல வண்டி ஓட்டினே, லைசன்ஸ் எடுன்னாரு. அவன் ஏதோ வேகமா தேடிட்டு திருதிருன்னு முழிச்சான். என்னடான்னு கேட்டா லைசன்ஸ அந்த கிளப்லயே கிரெடிட் கார்டோட சேர்த்து குடுத்துட்டு வந்துட்டேன், நான் திரும்பி போய் எடுத்துட்டு வரவான்னு அந்த போலீஸ்காரங்கிட்டயே கேக்கறான். டேய் என்னடா சொல்றேன்னு அவன் பாக்கறான்.

சரி வண்டி பேப்பர்ஸ் எடுன்றாரு அந்த போலீஸ்கார மாமா. வண்டி ரெஜிஸ்டிரேஷன் பேப்பர் குடுத்தான். சரி இன்ஷ்யூரன்ஸ் எடுன்னா தடவ ஆரம்பிச்சுட்டான். ஒரு வழியா தேடி எடுத்து கொடுத்தா அது போன வருஷத்தோட இன்ஷ்யூரன்ஸ். இந்த வருஷத்தோடது எங்கேன்னு தெரியலை. டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்

சரி இன்னைக்கு கெரகம் தெளிவா புடுச்சி கிளப் டான்ஸ் ஆட ஆரம்பிச்சது புரிஞ்சது.

அந்த போலீஸ்காரர் ரெஜிஸ்டிரேஷன் பேப்பர்ஸ் எடுத்துட்டு அவன் காருக்கு போயிட்டான். சரி அந்த ஊர்ல எல்லாம் ஏதோ டிக்கெட் தருவாங்களாமே, ஒண்ணோ ரெண்டோ குடுத்து வீட்டுக்கு விட்டுடுவான்னு நினைச்சுட்டு உக்காந்திட்டிருந்தா போனவன் வரவே இல்லை. என்னடா நடக்குதுன்னு ஒண்ணும் புரியலை எப்ப புரிஞ்சுருக்கு இப்ப புதுசா புரிய.

ஒரு 30 நிமிஷம் கழிச்சி ஒரு வழியா வந்தான். வந்தவன் போட்டானே ஒரு வெடி குண்டு.

கொஞ்சம் கேப் விட்டு சொல்றேன்